மீண்டும் விசாரணைக்கு வரும் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு!
2010-2014 ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைக்கு எனக் கூறி, அந்த கூட்டுத்தாபனத்தின் தற்போதைய போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.
2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அன்றைய பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவித்த விமல் வீரவங்சவின் பொறுப்பின் கீழ் இருந்தது.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்ற பெயரில் புதிய பொலிஸ் பிரிவை உருவாக்கி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அரசியல்வாதிகளிடம் விசாரணைகளை நடத்தியது. அப்போது விமல் வீரவங்சவை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.
பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்த உதவியதாக நீதிமன்றத்தில் வீரவங்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அப்போது விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை பிணை வழங்கப்படாது, வீரவங்ச தொடர்ந்தும் 87 நாட்கள் வெலிகடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் அண்மையில் ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினால், அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவ்வாறான நிலைமையில், வீரவங்ச தொடர்ந்தும் அரசாங்கத்தின் நிதியமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறான நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.