மக்கள் கடும் எதிர்ப்பு! கூட்டத்தில் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச
கனிய மணல் சம்பந்தமாக மாத்தறை கிரிந்தையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கிரிந்தை கடற்கரையில் உள்ள கானட் மற்றும் இல்மனைட் கனிய வளங்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்த அமைச்சர் விமல் வீரவங்ச முன்வைத்த யோசனை காரணமாக மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராமை, கிரிந்தை கடற்கரைகளில் உள்ள கானட் மற்றும் இல்மனைட் அடங்கிய மணலை அரசாங்கம் பெற்றுக்கொள்வது தொடர்பில் மக்களுக்கு விளக்குவதற்காக கிரிந்தை சமூக மண்டபத்தில் நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் இடையில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கனிய மணல் அகழும் நடவடிக்கைகள் முன்னெடுக்க இந்திய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன், அந்த நிறுவனத்துடன் இணைந்து அடுத்த கட்ட வேலைகளை செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் வீரவன்ச, கிரிந்தையில் அமைந்துள்ள அரச கனிய வள நிறுவனத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
இதனையடுத்து கூட்டத்தில் இருந்து அமைச்சர் வெளியேறிய போது ஹூ சத்தமிட்டு, மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் மக்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவை புகழ்ந்து கருத்து வெளியிட்டுள்ளதையும் காணமுடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.