மன நோய் மற்றும் தற்கொலை; காரணத்தை மறைக்கும் பெண்கள்!
கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு வரும் பெண்கள் பலர், தாக்குதலுக்கு உள்ளான காரணத்தை மருத்துவரிடம் மறைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் தொடர்பான சிறப்பு மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காரணத்தை மறைக்கும் பெண்கள்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வைத்தியசாலை வரும் பெண்களில் 50 வீதமானவர்கள் தாம் கணவனால் தாக்கப்பட்டத்தை கூறுவதில்லை என லக்ஷ்மன் சேனாநாயக்க கூறியுள்ளார்.
இவ்வாறு கணவனால் தாக்கப்பட்டு காயமடைந்து வைத்தியசாலை வரும் பெண்கள் பலர், தாம் கீழே விழுந்து காயமடைந்து விட்டதாகவும் அல்லது வேறு காரணங்களை கூறி சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்கப்படும் கர்ப்பிணி பெண்கள்
குறிப்பாக வீடுகளில் கர்ப்பிணி பெண்களும் அதிளவில் சித்திரவதை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களின் கரு கலைந்து விடுதல் அல்லது குறைந்த எடை கொண்ட பிள்ளைகள் பிறப்பது மற்றும் இரத்தபோக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
மன நோய் மற்றும் தற்கொலை
மேலும், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் பலர் மன நோய்க்கு ஆளாகுவதுடன் அதில் மூன்றில் ஒரு வீதமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.