யோஷித ராஜபக்சவுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நான்காம் இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மூன்றாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
யோஷித ராஜபக்ச வாக்குமூலம் அளிப்பதற்காக சற்று முன்னர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர் நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால் அவரால் முன்னிலையாக முடியாது என்று ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
முன்னாள் கடற்படை தளபதிக்கும் அழைப்பு
இதனையடுத்து, விசாரணைகளுக்காக இன்று முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அழைப்புக்கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படை தளபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |