வவுனியாவில் கோவில் தகராறு : இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை
வவுனியா வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
வவுனியா, ஓமந்தை காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.
அடாத்தாக கோவிலில் பூசை செய்ய முயன்ற குழு
குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.
தாய் மீதான தாக்குதலுக்கு நீதிகேட்கச் சென்ற மகன் கொலை
இதனால் பலத்த காயமடைந்த அவரைஅங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அவர்கள் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |