நீரில் மூழ்கி சகோதரர்கள் மூவர் உயிரிழப்பு : புத்தளத்தில் சோகம்!
புத்தளம் - நுரைச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
புத்தளம், தில்லையடி - உமராபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயதான ரம்ஸான் பாத்திமா ரிஸ்கானா, 19 வயதான ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா மற்றும் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான 25 வயதான இஸ்மத் முஹம்மது உஸாம் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சகோதரிகளை காப்பாற்ற முயன்ற இளைஞன்
நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகளான இரண்டு சகோதரிகளும், அவர்களின் தாயின் இளைய சகோதரியின் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், விடுமுறை கொண்டாட்டத்திற்காக நேற்று (06) மாலை 3 மணியளவில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் நுரைச்சோலை - தளுவ முகத்துவாரத்திற்குச் சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது, தளுவ முகத்துவாரத்தில் மாலைப் பொழுதில் இரண்டு சகோதரிகளும் அருகருகே நீராடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் வீசிய பலத்த காற்று மற்றும் கடும் நீரோட்டம் காரணமாக, அந்த இரண்டு சகோதரிகளையும் நீர் இழுத்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து, இரண்டு சகோதரிகளையும் கடல் நீர் இழுத்துச் செல்வதைக் கண்ட சகோதரர், அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலை
எனினும், இரண்டு சகோதரிகளும் நீருக்குள் மூழ்கிய நிலையில், அவர்களைக் காப்பாற்ற முயன்ற அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி உயிருக்காகப் போராடியுள்ளார்.

அதனையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி எடுத்தபோதிலும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. குடும்பத்தினர் கண் முன்னேயே இரண்டு சகோதரிகளும் அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்த சிலரின் உதவியுடன் கடல் நீருக்குள் மூழ்கிய இளம் யுவதிகள் இருவரும் இளைஞரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |