யாழ்ப்பாணத்தில் அட்டை பண்ணை காவலுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
யாழில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளவாலை - தும்பளை பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸன் ஸ்ரிபன் மதிவாணன் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடலில் இறங்கியவேளை இழுத்துச் சென்ற அலை
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரின் மாமனார் அட்டை பண்ணையை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் குறித்த இளைஞனும் வேறொருவரும் நேற்றிரவு அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்றனர்.

குறித்த இளைஞன் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்ற நிலையில் அவரை அலை இழுத்து சென்றதால் அவலக்குரல் எழுப்பினார். அவருடன் சேர்ந்து சென்றவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் அவராலும் குறித்த இளைஞனை காப்பாற்ற முடியவில்லை.
அட்டை பண்ணைக்கு அருகாமையில் சடலம்
பின்னர் ஊரவர்கள் இணைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை அவரது சடலம் அட்டை பண்ணைக்கு அருகாமையில் மிதந்தவாறு காணப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |