யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (01) மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.
வெடிக்காமல் இருந்த பட்டாசு
அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக உயிரிழந்த நபர் அருகில் சென்று ஊதியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |