அராங்கத்திற்கு எதிராக வலுவடையும் எதிர்ப்பு! தேரரின் வழிகாட்டலின் கீழ் புதிய அமைப்பு
அரசாங்கத்துடன் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியான அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதற்கு தலைமையேற்று செயற்பட்டு வருவாகவும் இதற்கு முன்னணி தேரர் ஒருவரின் உதவியும் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
பதவிகள் வழங்கப்படாமை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமை போன்ற காரணங்களின் அடிப்படையிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இல்லாமல் ஆக்க போவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அத்துடன் பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது, அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இருந்த சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.