ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களையும் மீறி, ஈரான் நீதிமன்றம் இந்த "உறையவைக்கும் தீர்ப்பை" வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பானது போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதல் பெண் ஹெம்மாட்டி
ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28, 2025 அன்று வெடித்து, பல வாரங்களாகத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் ஹெம்மாட்டி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதாகவும், பாதுகாப்புப் படையினர் மீது பொருட்களை வீசியதாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், துணை ராணுவப் படையான பசிஜ் படையைச் சேர்ந்த ஒருவரைக் காயப்படுத்தியதாகவும் அந்த நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மனித உரிமைகளை மீறும் செயல்
உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தத் தீர்ப்புக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன.

இந்தத் தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.
ஏற்கனவே தூக்கிலிடப்பட்ட ஏழு பேரைத் தவிர, ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் குறைந்தது 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பல நூறு பேர் மீது தூக்கிலிடப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் இந்திய மனித உரிமைகள் ஆணையம் (IHR) எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |