ரங்க ராஜபக்சவின் மர்ம மரணம்...! இன்று பிரேத பரிசோதனை: விசாரணைகள் தீவிரம்
நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிதியமைச்சின் அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு காவல்துறை குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயங்களை காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கை திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார்.

ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
ஆரம்பகட்ட விசாரணை
அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், இடைநிறுத்தப்பட்டிருந்தபோது இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |