2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு அதிகாரம் உள்ளதாக 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.
திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன் கொடுப்பனவு, மூன்றாம் தரப்பு ஒன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நிதிக் குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நிதி அமைச்சின் செயலாளர் இன்று (30) சமூகமளிக்க முடியாது என கடிதம் மூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழ், எவரையும் குழுவிற்கு அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அழைப்பை மீறுவோருக்கு உயர்நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் மூலம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இது ஹேக்கர்களின் செயலா என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை, மின்னஞ்சல் ஊடாக இடம்பெற்ற இந்த கொடுக்கல் வாங்கலில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்தார்.
அத்துடன் ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |