கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, நேற்று (25.04.2026) இரவு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்கள் பொதி செய்யப்பட்டிருந்த இரட்டை அடிப்பகுதிகளைக் கொண்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருள் மற்றும் ஹாஷிஷ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப்பயணச் சீட்டுக்கள்
இதன்படி, ஒவ்வொரு பிக்குகளும் தலா ஐந்து கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை தமது பயணப் பொதிகளில் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த குழுவினர் ஏப்ரல் 22 ஆம் திகதி முகவர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப்பயணச் சீட்டுக்கள் மூலம் பாங்காக் சென்றிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சிவில் உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து ஆதாரங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகக் கருதப்படுவதுடன், பாரிய போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைதுசெய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம் மதகுருமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்ற புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்