யாழில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்!
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (06) காலை வேளை பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் பொருட்கள் சேதம்
குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன், ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும் சேதமடைந்துள்ளன.

இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டனர்.
மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி, உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |