கனடாவில் கோர விபத்து - இலங்கையைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் பலி
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் மில்டன், பிரிட்டனி வீதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தாய், தந்தை மற்றும் மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். 28 வயதுடைய கனேடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் எனப்படும் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதில் அவரது மனைவியும் மகளும் பயணித்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கனேடிய இளைஞன் குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்திற்கு காரணமாக இருந்த 28 வயதுடைய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹால்போன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த அத்துல கருணானந்த என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் நாவல ராஜகிரியவில் இருந்து கனடாவுக்கு சென்ற நிலையில் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மில்டனில் இடம்பெறவுள்ளது. எனினும் கொரோனா காரணமாக இறுதி சடங்கில் சிறிய அளவிலான மக்களே கலந்து கொள்ளவுள்ளனர்.