வடமாகாணத்தில் இடம்பெறும் மனிதக்கடத்தல்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் வகையில் வடமாகாணத்தில் பாரிய மனித கடத்தல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சிறிலங்கா குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களை கைது செய்வதற்காக பயிற்சி பெற்ற குடிவரவு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களைக் கண்டறிவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மனித கடத்தல்

இதற்கமைய விமான நிலையத்தில் இரகசியமாக நிறுத்தப்பட்டிருந்த குடிவரவு எல்லை சேவை அதிகாரிகளினால் ஏழு பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெருபாலானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், வடமாகாணத்தில் பாரிய மனித கடத்தல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இவர்களில் பலர் கடத்தல் காரர்களுக்கு தலா 5 மில்லியன் பணம் வழங்கியுள்ளதாகவும் சிறிலங்கா குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கண்காணிப்பு காரணமாக பலர் தற்போது ஐரோப்பாவிற்கு செல்ல விரும்புவதாகவும், அதற்காக வான்வழி பாதையை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாய்லாந்து, இந்தோனேஷியா, மியன்மார், வியட்நாம், மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஆரம்பத்தில் பயணம் செய்த பலர், பின்னர் கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்கு சென்றதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
இதனால் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் இனி நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.