ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டம் - இல்லாதொழிக்க தீவிர முனைப்பு
ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்கு முறையை இல்லாதொழிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மேலவை இலங்கை கூட்டணியும் சுதந்திர மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமடையச் செய்து நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்தல் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுவருவதாக குறித்த அமைப்புக்களின் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடு

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து இரண்டு அமைப்புக்களினதும் தலைவர்களான விமல் வீரவன்சவுக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவது மிக முக்கியமானது என அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விமல் வீரவன்சவும் டலஸ் அழகப்பெருமவும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடியுள்ளனர்.