பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே அரசின் நிலைப்பாடு : நீதியமைச்சர் அறிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் இன ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளை விரைந்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான குழுவினரிடம் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த வாரம் நீதியமைச்சில் நடைபெற்றது.
மனித உரிமைகள்
இக்கலந்துரையாடலில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்வதற்காகக் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
அதன்படி அங்கு கருத்து வெளியிட்ட ஹர்ஷன நாணயக்கார, “பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்
அதேபோன்று 'இதற்குப் பதிலாகப் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய சட்டமானது உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கக்கூடியவகையில் அமையவேண்டும்.
அதேவேளை அச்சட்டம் சர்வதேச நியமங்கள் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும் இருக்கவேண்டும்.
கடந்தகால அரசாங்கங்கள்
அத்தோடு கடந்தகால அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
எனவே தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது மிகக்குறுகிய காலத்துக்குள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் தொடர்புடைய விடயங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் எதிர்வரும் மேமாத தொடக்கத்திலிருந்து இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
