போராட்டகாரர்கள் மீதான தாக்குதல்:சர்வதேச சமூகத்திடம் பேராயர் விடுத்துள்ள கோரிக்கை
சர்வதேச அவப்பெயர் மற்றும் நாட்டின் நெருக்கடியை தீர்க்க கிடைக்க வேண்டிய சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்காது போனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நிராயுதபாணிகளாக, எவ்வித வன்முறையும் இன்றி ஜனநாயகமாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த போராட்டகாரர்கள் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் இரவு உறங்கிக்கொண்டிருந்த அவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியின் பணிகளை பெறுபேற்று 24 மணி நேரம் செல்லும் முன்னர் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, சட்டவிரோத தாக்குதலை நாங்கள் முழுமையாக கண்டிக்கின்றோம்.
அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்பதாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவான, அதுவரை நாடாளுமன்றத்திற்கு எவ்வித மக்கள் விருப்பங்களும் இன்றி இருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த தாக்குதலின் மூலம் அரசியலமைப்புச்சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை முற்றாக மீறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இருந்து இன்று மாலை வெளியேறுவதாக போராட்டகாரர்கள் கூறியிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட இந்த மிக மோசமான தாக்குதலையும் இந்த தாக்குதலை ஏதுவாக கொண்டு எதிர்காலத்தில் ஏதேனும் அனர்த்தமான சம்பவங்கள் நடந்தால், அவை அனைத்திற்கு ஜனாதிபதி முற்றாக பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
தாக்குதலுக்கு உள்ளானவர்களில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கின்றோம். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இப்படியான அடக்குமுறை செயல்களை காரணமாக கொண்டு, ஏற்படக்கூடிய சர்வதேச அவப்பெயர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண கிடைக்க வேண்டிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஜனாதிபதி நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்க விரும்புகிறோம்.
எம்மை போல் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் அப்பாவி மக்களை அமைதியான எதிர்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் பொலிஸ் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தி,அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இந்த அரசியலமைப்பு விரோத மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக சுதந்திரமானதும், வெளிப்படைத்தன்மையானதுமான விசாரணைகளை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
போராட்டத்தின் மூலம் அரசியல் லாபம் பெற்று, அந்த போராட்டத்தை அடக்க மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றோம் என எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
