போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது!
போலியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து ஆசிரியராக கடமையாற்றிய நபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரால் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் சேவையில் பணியாற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றினார்.
இதேவேளை குறித்த நபருக்கு போலியான பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போலியானது எனக் கண்டறியப்பட்டது
ஆசிரியர் சேவையில் பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டார்.
மோசடிக் குற்றச்சாட்டு
2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக தொழில் புரிந்து சம்பளம் பெற்றுவந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகைமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் காவல்துறை திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் காவல்துறை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. காவல்துறைப் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி செய்த நபரைக் கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மோசடி நபர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளில் சித்தியடையவில்லை எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நாளை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.