16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் - வைரலான காணொளியால் சிக்கிய குடும்பம்
காலியில் 16 வயது சிறுவன் ஒருவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் அவர்களின் 17 வயதுடைய மகள் மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.
கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலி பகுதியில் இடம்பெற்ற சொத்துத் திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபராகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

காலி காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரான சிறுவனை, முறைப்பாட்டாளர் தரப்பினர் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக அவரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (04) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 8 மணி நேரம் முன்