கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளர்! நீதிமன்றில் அம்பலம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியானதுடன் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகியுள்ளதாக நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது.
விரிவுரையாளரின் கொலை வழக்கில் சாட்சியம், அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார்.
விளக்கமறியல் நீடிப்பு
இந்தநிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக குறித்த வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ம் திகதிக்கு நீதிவான் திகதியிட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை ஜீன் மாதம் 16ம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகியிருந்தார்.
முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகிவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |