இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்: லட்சக்கணக்கில் கொள்ளை
ஹபராதுவ, தல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்குள் ரஷ்ய பிரஜையொருவரைத் தாக்கி காயப்படுத்தி பணத்தை கொள்ளையடித்தனர் எனக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்யாவைச் சேர்ந்த நால்வரை கைதுசெய்வதற்கு ஹபராதுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில், தாக்கப்பட்ட 39 வயதுடைய ரஷ்ய பிரஜை காயங்களுடன் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரஷ்ய ரூபிளை இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொண்டிருந்த ரஷ்யப் பிரஜையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ரஷ்ய பிரஜைகள் நால்வரும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பண பரிமாற்றம்
இந்த தாக்குதல் சம்பவம் பண பரிமாற்றத்தின் போது முரண்பாடு வலுப்பெற்றதைத் தொடர்ந்தே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர், தன்னைத் தாக்கிய ரஷ்ய பிரஜைகள் தன்னிடமிருந்த 38 இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்தனர் என்று காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.