சிங்கள மொழி பேசுபவர்களால் யாழில் 300 ஏக்கர் காணி அபகரிக்க முயற்சி : முறியடித்த மக்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய(22) தினம் காலை 11 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமுக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300. ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரித்து நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.
காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள்
அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர்.
குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்ட நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
குடியிருக்கவே காணிகள் இல்லை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள் தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லையெனவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் எவ்வாறு இந்நத காணி அளவீடு அனுமதி வழங்கப்பட்டதுஎன கேள்வி எழுப்பியதுடன் இதனை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

