சர்வதேசத்தில் தடை -இலங்கையில்அனுமதி
தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்லவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் விவசாயிகள் பல்வேறுவகையான இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய பூச்சிக்கொல்லிகளின் தரம் குறித்த ஆய்வுகள் சர்வதேச பூச்சிக்கொல்லி நடவடிக்கை வலையமைப்பால் நடத்தப்படுகின்றன.
40 வகையான பூச்சிக்கொல்லிகள்

எனினும், சுற்றாடல் நீதி நிலையத்தின் விசேட ஆய்வுக் குழுவினால் 09 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு "மிகவும் ஆபத்தானது" மற்றும் "பயிரிடுவதற்குத் தகுதியற்றது" என பெயரிடப்பட்ட 40 வகையான பூச்சிக்கொல்லிகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அவற்றில் சில பூச்சிக்கொல்லிகள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த 40 இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் 2016 நவம்பர் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அமைச்சரின் விளக்கம்

இதன்படி, இது தொடர்பில் பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்திடம் ஊடகமொன்று வினவிய போது, சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்துகளும் இந்நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் இது பற்றி குறித்த ஊடகம் கேட்டது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் தொடர்பில் பூச்சிக்கொல்லி பதிவாளர் காரியாலயத்திடம் விசேட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.