தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
பொரளையில் (Colombo 08) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று (07.08.2025) இரவு 8:40 மணியளவில் பொரளை - சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்கூட்டரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
இதில், சுமார் 20-25 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலின் பின்னர் குற்றவாளிகள் தப்பியோடியதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஐந்து இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், களனியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், தற்போது, மற்றுமொரு இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணை
மீதமுள்ள மூவரின் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
