அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!! சூடுபிடிக்கும் அரசியல் களம்
சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (11) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார் .
இதேவேளை, சர்வகட்சி ஆட்சி அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைத்து பதவி விலக தயார் என குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் அனைவரும் பிரதமரிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் பதவி விலகியது செல்லாது
முன்னராக அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தமது இராஜினாமா கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
எனினும் இந்த பதவி விலகல்களை ஏற்றுக்கொண்டதாக அரச தலைவரிடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால், இவர்களின் பதவி விலகல் செல்லாது என அரசியல் அவதானிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.