இரண்டு வருடங்களுக்குள் ஐந்து கோடி சம்பாதித்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
இரண்டு வருட காலப்பகுதியில் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று (21) விடயங்களை சமர்ப்பித்த ஆணைக்குழு, 2023 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறும் எனத் தெரிவித்தது.
நீதிமன்றிடம் அனுமதி கோரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
தற்போது பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, இலஞ்ச ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முழுமையாக முடிவடைந்து, ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதால், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பொருத்தமான ஒரு திகதியை வழங்குமாறும் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது.
பெருமளவு தொகையை எவ்வாறு சம்பாதித்தார்
2011 மார்ச் 31 முதல் 2013 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் 57,347,956.98 ரூபாய்க்கு அண்மித்த தொகையை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்த முடியாத செலவுகளைச் செய்து சொத்துக்களை வாங்கியது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு இந்த விசாரணையை ஆரம்பித்திருந்தது.

ராகல பிரதேசத்தில் கோடிக்கணக்கான பெறுமதியான காணியை வாங்குதல், 'என்.பி.ஆர். சன்' என்ற கூட்டு வர்த்தகத்தை ஆரம்பித்தல் மற்றும் சுங்க வரி இல்லாத வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றின் உத்தரவு
அத்துடன், தனது நண்பர்களுக்காக துபாய் பயணங்களை ஏற்பாடு செய்து அதற்குப் பணம் செலவழித்தல், ஒரு நண்பரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுதல் மற்றும் தனது காலஞ்சென்ற சகோதரர் எஸ்.பி. ரத்நாயக்கவிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறுதல் உள்ளிட்ட பல சட்டவிரோத சொத்துச் சம்பாதிப்பு சம்பவங்கள் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2015 மார்ச் மாதம் கிடைத்த அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் தொடர்பில், 2025 டிசம்பர் 02 ஆம் திகதி சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கைகளை பரிசீலித்த பிரதான நீதவான், குறித்த வழக்கின் விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 58 நிமிடங்கள் முன்