வெடித்த இரசாயனப் பதார்த்த போத்தல் - சம்பவத்தில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்
புஸ்ஸல்லாவ சரஸ்வதி தமிழ்க் கல்லூரியின் ஆய்வகத்தில் இரசாயனப் பதார்த்தம் அடங்கிய போத்தல் உடைந்ததில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வகத்தில் இரசாயனப் பதார்த்தம் அடங்கிய போத்தல் உடைந்து அதன் புகையை சுவாசித்ததால் சிரமத்திற்குள்ளானதில் ஐந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் இன்று(21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூச்சு திணறல்

உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடசாலையின் ஆய்வகத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது இரசாயனப் பொருள் அடங்கிய போத்தல் தரையில் விழுந்து வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரசாயனங்கள் அடங்கிய போத்தல் வெடித்ததில் புகையை சுவாசித்ததில் மூச்சு திணறல் ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடசாலையின் ஏனைய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.