இலங்கை செய்தது பச்சைத் துரோகம்! இந்திய மத்தியிடம் அவசர கோரிக்கை
சீனக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சீனக் கப்பல் விடயம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்
“இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசாங்கம், இப்போது அதன் நிலையை மாற்றிக்கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது.
இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும்.
இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.
இந்திய மத்தியிடம் அவசர கோரிக்கை
இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக இராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.
இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சதீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
