யாழில் கரப்பான் பூச்சியுடன் விற்கப்பட்ட வடை - நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
யாழில் வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாகத் தெரிவித்து சீல் வைத்து மூடப்பட்ட உணவகத்திற்கும் அதன் சமையற்கூடத்திற்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இத தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உணவகத்திற்கு 60,000 ரூபா தண்டமும், சமையற்கூடத்திற்கு 20,000 ரூபாதண்டமும் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில், கடந்த மாதம் (04.12.2022) திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அன்றைய தினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.
உணவகத்திற்கு சீல்
இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டன. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் பரிசோதிக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் இனங்காணப்பட்டன. இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற்கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் 06.12.2022 அன்று பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.
நீதிமன்றின் உத்தரவு
இதனையடுத்து உணவகமும், சமையற்கூடமும் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையிலேயே இன்றைய தினம் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000 ரூபா தண்டமும், சமையற்கூடத்திற்கு 20,000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.
இதையடுத்து சுமார் 40 நாட்களாக சீல் வைத்து மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின் கட்டளையினையடுத்து இன்று திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
