கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல்! மிதந்து வந்த பொருட்களை எடுத்துச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை
எக்ஸ்பிறஸ் பேர்ள்ஸ் கப்பலில் இருந்து கடலில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க கடலுக்குச் சென்றவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நச்சு இரசாயனங்கள் இருப்பதாக அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எரியும் கப்பலில் இருந்து மிதக்கும் பொருட்களை சேகரித்த கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் ஒவ்வாமைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என கூறப்படுகிறது.
அவர்களுக்கு தோலின் மேற்பரப்பில் கொப்புளங்கள், புள்ளிகள் மற்றும் அரிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருட்கள் சேகரிக்கும் போது கைகால்கள் கடல்நீருக்குள் அதிகமாக சென்ற இடங்களில் இந்த கொப்புளங்கள் அதிகம் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், தர்ஷனி லஹந்தபுர தெரிவிக்கையில்,
மக்களை பாதித்த இந்த ஒவ்வாமைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறினார். கப்பலின் கழிவுகள் தொடர்ந்து கரையை அடையும் என்றும் அது எதையும் தொடவோ தொட முயற்சிக்காது இருக்கவும் என்று வலியுறுத்தினார்.
கரையோர துப்புரவு பணியை அறிவியல் முறையில் மிக விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
