விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு! கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் வழங்கிய வாக்குமூலம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டளைப்படியே பணப்பரிமாற்றம் செய்ய முயன்றதாக இந்தியாவில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த உமா காந்தன் என்பவரின் கட்டளைப்படி, மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து, அந்த அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையிலி்ருந்து சுற்றுலா விசாவில், 2019 ஆம் ஆண்டில் சென்னைக்கு சென்ற லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற 45 வயதான பெண்ணொருவர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக கியூ பிரிவு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் தகவல்
இந்நிலையில், NIA என்ற தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், குறித்த இலங்கை பெண் விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமுலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்ததையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பணச்சலவை வழக்கில், அந்த பெண்ணை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் புலிகள் அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றமை தெரியவந்துள்ளது.
இலங்கைப் பெண் வாக்குமூலம்
மேலும் அவர் வழங்கிய வாக்குமூலத்தில், “ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த உமா காந்தன் தங்கியுள்ளார். அவர் பிறப்பித்த கட்டளைப்படியே நாம் செயல்பட்டு வந்தோம்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஹமிதா ஏ லொல்ஜி என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அவர் உயிரிழந்து விட்டார். எனினும்,லொல்ஜியின் வங்கி கணக்கில், 42 கோடி ரூபாய் இருப்பது உமா காந்தனுக்கு தெரியவந்தது.
இந்த பணத்தை விடுதலை புலிகள் அமைப்புக்கு மாற்ற, தாம் உட்பட ஐந்து பேரை கருவியாக பயன்படுத்தினார். லொல்ஜியின் பணத்தை, இணைய வாயிலாக தங்கள் அமைப்புக்கு மாற்ற முயன்றோம்.
அதற்காக போலி ஆவணங்கள் வாயிலாக, லொல்ஜியின் பெயரில், 'சிம் அட்டை வாங்கினோம். அதை பயன்படுத்தி, பணத்தை எடுக்க முயன்ற போது, எங்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதனால், லால்ஜியின் வாரிசுகள் என்பது போல சான்றிதழ் தயார் செய்தோம். இந்த சான்றிதழை பயன்படுத்தி பணத்தை எங்கள் அமைப்புக்கு மாற்ற, சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து மும்பை செல்ல இருந்தேன். எனினும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், 2019 ஆம் ஆண்டில் சென்னைக்கு சென்ற குறித்த இலங்கை பெண்ணும் அவரது நண்பர்களும், அண்ணாநகரில் தங்கியிருந்தனர். இலங்கைப் பெண்ணுடன் சேர்த்து அவரின் நண்பர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
