தையிட்டி அளவீட்டு சர்ச்சை: அதிகாரிகளின் விளக்கங்களில் முரண்பாடுகள்
தையிட்டி விவகாரத்தில் காணி உரிமையாளர்கள் “காணிகளை விடுவிக்கும் நோக்குடனே அளவீடு செய்யப்படுகிறது” என்ற எழுத்து மூலம் உறுதிமொழியை கோரியபோது, அதனை வழங்க அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், ஏழு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஒரு பொதுக் கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து மூலம் உறுதி அளிக்கும் அதிகாரம் இல்லையெனில், இத்தகைய கூட்டு கடிதத்தில் கையெழுத்திடப்பட்டது எந்த அடிப்படையில்?
பொதுக் கடிதத்தில் உறுதி
மேலும், காணி உரிமையாளர்கள் கேட்டபடி ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் உறுதிமொழி வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே கடிதத் தலைப்பில் கையெழுத்திட முடியாது என்பது நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமா, அல்லது இது பொறுப்பைத் தவிர்க்கும் முயற்சியா?
அதேபோல், மூன்று முறை திருத்தப்பட்ட கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அந்தக் கடிதங்களில் காணி உரிமையாளர்களின் அடிப்படை கோரிக்கையான, காணி விடுவிப்பு உறுதியை, தெளிவாக பிரதிபலித்ததா?
இறுதியாக, உறுதிமொழி வழங்க இயலாது என்று கூறிய அதிகாரிகள், அதே நேரத்தில் “பொதுக் கடிதத்தில் உறுதி வழங்கியுள்ளோம் என கூறுவது தன்னிலையிலேயே முரண்பாடாக இல்லையா?
இந்தச் சூழலில், அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டதற்கான முழுப் பொறுப்பு காணி உரிமையாளர்கள்மீது மட்டுமே சுமத்தப்படுவது நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது?
என்ன நடந்தது?
தையிட்டி விவகாரத்தில் கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து, அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் அதிகாரிகள் தரப்பு.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது.
அதன் போது, காணி உரிமையாளர்கள் "காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்" என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை என கூறியுள்ளனர்.
இதன் பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் காணி அளவீட்டு பணிக்களுக்காக வந்திருந்த நில அளவை திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் , புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் மாவட்ட செயலர் , பிரதேச செயலர் உள்ளிட்ட 07 தரப்பினரும் ஒரு கடிதத்தில் ஒப்பம் வைத்து கையெழுத்திட்டுள்ளனர்.

அதிலும் திருத்தங்கள் தேவை என கூறி, மறுபடியும் ஒரு கடிதம் எழுதி , அதிலும் திருத்தங்கள் சொல்லி, மூன்றாவது கடிதத்தினை ஏற்றுக்கொண்டனர்.
ஆனாலும் , அதனை ஒரு திணைக்களத்தின் கடித தலைப்பில் எழுதி, அதற்கு கீழ் 7 அதிகாரிகளும் கையெழுத்து வைக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
நாங்கள் ஏழு அதிகாரிகளும் வெவ்வேறு திணைக்களத்திற்கு உரியவர்கள்.
ஒரு திணைக்களத்தின் கடித தலைப்பின் கீழ் ஏழு பேரும் ஒப்பமிட முடியாது.
அதிகாரிகளாக எழுத்து மூல உறுதி மொழி வழங்கும் அதிகாரமே எமக்கு இல்லாத போதிலும் , ஒரு பொதுவான கடிதத்தில் உறுதிமொழி தந்தும் அதனை ஏற்கா முடியாது விட்டால் அளவீட்டு பணிகளை கைவிடுவோம் என கூறியும் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |