தையிட்டி பவானி வீதி விவகாரம் :காவல்துறையின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.
மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு
அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.
குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின் மூலமே கேள்விக்கு உட்படுத்த முடியும்.
அதாவது வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும். காவல்துறையினரும் ஒரு அரச திணைக்களத்தை சார்ந்தவர்கள்.
வழக்கிலிருந்து விடுதலை
ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.

அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.
அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு தொடுநரான பலாலி காவல்துறையினர் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இருவரையும் நீதிமன்றமானது வழக்கிலிருந்து விடுவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |