பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 29 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது தற்போதைய நிலையில் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலைமை மிகவும் தீவிரமாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டம் பாதிப்பு
இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பகுதி, மஹரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன மற்றும் கொதடுவ போன்ற பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானமிக்கவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு
அதற்கமைய நேற்று (24) முதல் நாளை மறுதினம் (26) வரை 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48,287 ஆக உயர்வடைந்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 26,487 நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் 58.3% அதிகரிப்பு ஆகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் 24 வாரங்களில் சராசரியாக 1,104 நோயாளிகள் பதிவாகியிருந்தனர். ஆனால் 2026ஆம் ஆண்டின் 24ஆம் வாரத்தில் மட்டும் 4,824 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது 2025ஆம் ஆண்டின் அதே வாரத்தில் பதிவான 1,334 நோயாளிகளைக் காட்டிலும் 3.6 மடங்கிற்கும் அதிகம் ஆகும்.
களுபோவில போதனா மருத்துவமனை மற்றும் ஐ.டி.எச் தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை ஆகியன டெங்கு நோயாளர்களினால் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்