இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா சிலரின் புலம்பெயர் நிதி
ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே விளங்கிவந்துள்ளது.
ஆனால், மிக அண்மையக்காலமாக ஈழத்து சைவ ஆலயத் திருவிழாக்களில் மேலோங்கிவரும் கட்டுப்பாடற்ற ஆடம்பரங்களும், வணிகமயமாக்கலும், பண்பாட்டு விலகல்களும் சைவ சமய ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அதேபோல மரபுசார்ந்த பக்தி நெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனியாரின் நிதியாதிக்கத்தைக் காட்டும் போட்டித் தளமாக ஆலயங்கள் மாறிவருவது சைவச் சமூகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான எச்சரிக்கை குறியீடாக மாறியுள்ளது என்பதே இப்போதைய நிதர்சனமாகும் .
கடந்த காலக் கட்டுப்பாடுகளும் தற்போதைய கள யதார்த்தமும்
ஒரு காலத்தில் யாழ்ப்பாண ஆலயத் திருவிழாக்களில் "சின்னமேளம்" என்ற பெயரில் இடம்பெற்ற சதிராட்டப் போட்டிகளும், உபயக்காரர்களின் போலிப் பெருமைகளும் கலாச்சார ரீதியான சிக்கல்களை உருவாக்கியிருந்தன. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில், சமூக ஒழுக்க நெறிமுறைகளைப் பேணும் பொருட்டு ஆலயங்களில் இத்தகைய ஆடம்பரக் கலைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.
அதன் பின் ஆலயங்கள் ஆடம்பரங்களின்றியும், பக்தியை மட்டுமே முதன்மைப்படுத்தியும் இயங்கக்கூடிய சூழல் இயல்பாக உருவாக்கப்பட்டது.
ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஈழ நிலப்பரப்பின் கேட்பாரற்ற சூழலில், முறையான வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, பல ஆலயங்களில் கட்டுப்பாடற்ற பண்பாட்டு மீறல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
புலம்பெயர் பணமும் போலிப் பெருமிதப் போட்டியும்
நமது தயாக நிலப்பரப்பின் தற்போதைய சீரழிவுகளுக்கு முதன்மைக்காரணியாக அமைவது, ஆலய நிர்வாகங்களை அசைக்கும் கட்டுப்பாடற்ற பணப் புழக்கமாகும்./ குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம், பக்திக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊர்ப் பெருமையையும் தனிநபர் செல்வாக்கையும் பறைசாற்றும் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.
பல லட்சக்கணக்கில் பட்டுச் சாத்துதல், மாம்பழ ஏலம் என்ற பெயரில் கோடிகளைக் கரைத்தல், போட்டிபோட்டுக்கொண்டு மாலைகளைச் சாத்துதல் போன்றவை ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் வணிகக் காட்சிகளாக மாறியுள்ளன.
அதே போலவே மரபுசார்ந்த தென்னிலங்கை ஆட்டங்கள், கேரளா செண்டை மேளங்கள், திரையிசைப் பிரபலங்களை வரவழைத்துக் கச்சேரிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள், ஆலயங்களின் அமைதியையும் சைவ மரபின் புனிதத்தையும் முற்றாகச் சிதைத்து நிற்கிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போன்ற தளங்களில் இன்றளவும் இறுக்கமாகப் பேணப்படும் வழிபாட்டு ஒழுக்கமும் கட்டுப்பாடும், பிற கிராமிய மற்றும் நகர ஆலயங்களில் இல்லாமல் போவதற்குக் காரணம் தகுதியான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு இன்மையே ஆகும்.
ஆலயத் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்
ஈழத்து சைவ மரபைக் காப்பாற்றவும், ஆலயங்களை மீளவும் ஆன்மீக மையங்களாக மாற்றவும் உடனடியாகக் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- ஆடம்பரக் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி: சினிமாப் பாடல்கள், வணிகரீதியான குத்தாட்டங்கள், வேற்றுப் பண்பாட்டுக் கலைக் குழுக்களின் ஆடம்பரக் காட்சிகளுக்கு ஆலய வளாகத்திற்குள் முற்றாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.பண்ணிசை, தேவாரம், திருவாசகம் மற்றும் மரபுசார் கலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆலயம் கேளிக்கை காட்டும் இடம் கிடையாது.
- நிதிக்கட்டுப்பாடும் உச்சவரம்பும்: உபயக்காரர்கள் செய்யும் செலவுகளுக்கு ஆலய நிர்வாகங்கள் நல்லூரைப்போல தெளிவான உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். தனிநபரின் பண பலம் ஆலய மரபுகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
- சமூகப் பயன்பாட்டிற்கு நிதியைத் திருப்புதல்: திருவிழாக்களில் வீணடிக்கப்படும் ஆடம்பரப் பணத்தைக் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் சைவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
- உயர்மட்டச் சைவ ஆதீனம் அல்லது தலைமைப் பீடத்தின் அவசியம்.
ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் தன்னிச்சையாகவும், எவ்விதக் கட்டுப்பாடின்றியும் செயல்படுவதே இத்தகைய கலாச்சார மீறல்களுக்கு அடிநாதமாகும். இதைக் கட்டுப்படுத்த, அனைத்துச் சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஓர் உயர்மட்ட சைவச் சபையோ அல்லது ஈழத்துச் சைவ ஆதீனம் போன்ற ஒரு தலைமைப் பீடமோ உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
உண்மையில் ஆலயங்களின் கோபுர உயரத்திலோ, நாற்பது அடித் தேரின் பிரம்மாண்டத்திலோ சைவ சமயத்தின் பெருமை இல்லை என்பதையும் அங்கு பேணப்படும் ஆன்மீக ஒழுக்கத்திலும் அமைதியிலுமே சைவ சமயத்தின் ஆன்மா வாழ்கிறது என்பதனையும் உணரத்தலைப்பட வேண்டும்.
ஊர்மக்களின் சுயவிழிப்புணர்வும், அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட சைவத் தலைமைப் பீடத்தின் எழுச்சியும் மட்டுமே ஈழத்து ஆலயங்களின் கைநழுவிப்போகும் புனிதத்தை மீட்டுத்தரும் என்ற காலத்தின் ஆகப்பெரிய உண்மையை சைவ சமயத்தார் உணரவேண்டும் .
கடந்த நாட் களில் கிளிநொச்சி ஆலயங்களில் நடைபெற்ற அரைநிர்வாண ஆட்டங்கள் சைவசமயத்தையும் அதன் பண்பாட்டு ஒழுக்கத்தையும் சவப்பெட்டியில் வைத்து மூடியிருக்கிறது என்ற விடையம் புலம்பெயர் பணக்காரர்களுக்கு உணரத்தப்படவேண்டும்.
இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி என்ற கேள்வி சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று பெருங்கேள்வியாகி நிற்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |