பயங்கரவாத தடைச் சட்டத்தின் மாற்று சட்டத்திலுள்ள ஆபத்து!
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்( PSTA) தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிப்வு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று(1) திங்கட்கிழமை யாழ் பொது நூலக மண்டபத்தில் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்றது.
புலம்பெயர் சமூகத்தினருக்கு சிக்கல்
அதன்போது, “தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக முன்மொழியப்பட்ட PSTA பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் புதிய சட்டமாக வர உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

ஆனால் பரந்த வரையறைகள் மற்றும் கடுமையான பிரிவுகள் காரணமாக, இது பொதுமக்களின் போராட்டங்கள், சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினரை குறிவைக்கக்கூடும்” என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
விமர்சனங்கள்
அத்துடன், இலங்கை குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களும் பாதிக்கப்படலாம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கலந்துரையாடலில் வளவாளராக சட்டத்தரணி ஐங்கரன் கலந்து கொண்டதுடன் பங்குபெற்றாளர்களாக பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்பினர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் கடற் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |