எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் குழப்பியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் (26) இடம்பெற்றது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைதியின்மை
கூட்டத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் அருச்சுனாவின் விரும்பத்தகாத செயற்பாடுகளால் அவ்வப்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தநிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரமானது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது பின்னாள் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் கூட்டத்தில் உரத்து சத்தமிட தொடங்கினர்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசுமாறும் மற்றும் மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு தொடர்ச்சியாக கூச்சலிட்டனர்.
அதையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட சிலர் தையிட்டி விவகாரம் தொடர்பாக கருத்துரைத்தவாறு இருந்தனர்.
இந்தநிலையில் பின்னால் இருந்து கூச்சலிட்டவர்களுடன் சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் குழப்பியதை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
பேச வேண்டாம்
அத்தோடு, தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம் என பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனும் அடையாளத்துடன் யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிய வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கடற்தொழில் அமைச்சர் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதற்காக விகாரையை உடைக்க முடியாது என கூறினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , ஏன் உடைக்க முடியாது ? தென்னிலங்கையில் சட்டவிரோத விகாரைகளை உடைக்க வில்லையா ? இது இராணுவத்தினரால் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட ஒரு சட்ட விரோத கட்டுமானம் அதனை உடைப்பதில் என்ன தடை என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதில் செல்ல முடியாது மென்று விழுங்கிக்கொண்டிருந்த வேளை கூட்டத்தில் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் கலந்து கொண்ட கரவெட்டி பிரதேச சபையின், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் " தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம் " எங்கள் கிராமத்தில் கோவில் பிரச்சினை ஒன்று இருக்கிறது. அது தொடர்பில் பேச வேண்டும் என கூறினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் . அமைச்சர் முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும் ,அதன் பின்னர் உங்கள் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என கூறிய போதிலும் , கரவெட்டி பிரதேச உறுப்பினர் இல்லை என குழப்பத்தில் ஈடுபட்டார்.
பிரதேச சபை தவிசாளர்களும், தையிட்டி விகாரை பிரச்சினை முக்கியமானது அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சர் பதில் அளிக்கட்டும் , அதன் பின்னர் உங்கள் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என கூறினார்கள்.
அதன் போது , குறித்த நபருக்கு அருகில் இருந்த வேறு சில தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் கூச்சல் எழுப்பு குழப்பத்தை உருவாக்கினர்.
மேலதிக தகவல் - தீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




