பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்லாதீர்கள் : சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை!
விமான நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விமான பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு சுங்கத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கும் நுட்பங்கள்
இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது.

மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனர், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பயணப் பையை நாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.
விமான பயணச் சீட்டு
அத்துடன், இலவச விமான பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்க வேண்டும்.

உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |