இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தமிழகத்தில் மீட்பு!
இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டின் வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மண்டபம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீபகாலமாக அதிகளவு போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடல்வழியாக கடத்தப்பட்டு வருகின்றது.
6கோடி மதிப்பு
இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி வேதாளை எம்ஜிஆர் நகரில் ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதன்போது போது 6 பொதிகளில் 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றமை தெரியவந்ததது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டுவரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
