மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி
புதிய இணைப்பு
மன்னார் நகர சபையின் தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவாகியுள்ளார்.
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.
இதன்போது சபையில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகமானோர் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் 14 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் ஒருவர் நடுநிலை வகித்தார்.
தவிசாளர், உப தவிசாளர் தெரிவு
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 06 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தனுக்கு 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் டானியல் வசந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதன்போது கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசன் 08 வாக்குகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச சபை
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபையின் (Manthai West Pradeshiya Sabha) தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் தெரிவாகியுள்ளார்.
தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணி அளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றது.
தவிசாளர் தெரிவுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.
இதன் போது சபையில் உள்ள 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
உப தவிசாளர் தெரிவு
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் 05 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் 15 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தொழிலாளர் கட்சி ஆகியவை ஆதரவு வழங்கியது.
மேலும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் நிஸாம் நிஜாத் போட்டியின்றி உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
முதலாம் இணைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமானது மன்னார் பிரதேச சபை
மன்னார் (Mannar) பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress) கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவாகியுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.
தவிசாளர் தெரிவு
இதன்போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்ததற்கு அமைய தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
கட்சிகள் ஆதரவு
பகிரங்க வாக்கெடுப்பு நடந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸிற்கு15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் உப தவிசாளராக றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
