யாழில் சங்கின் செயற்பாடுகளை பொறுத்தே வன்னியில் தமிழரசு செயற்படும் : எச்சரிக்கும் சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி செயற்படும் விதத்தைப் பொறுத்தே வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சபைகளில் எமது செயற்பாடுகளும் இருக்கும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
வவுனியா மற்றும் வன்னி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நேற்று (09) சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) செயற்பட வேண்டும்.
கூட்டணியின் முக்கியஸ்தர்கள்
அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களாக இருந்தால் வவுனியா மாநகர சபை (Municipal Council Vavuniya) மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம்.
இது தொடர்பில் நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் தெரிவித்திருக்கின்றேன்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை யாழில் உள்ள 17 சபைகளிலும் தமிழரசுக்கட்சி நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள் எனவும் அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் என சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
