நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை விவகாரம் - அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை குறித்து அவர்கள் அல்லது அவர்கள் மீது தனிப்பட்ட கோபம் கொண்டவர்கள் தகவல் வெளியிடாவிட்டால் அரசாங்கம் அதனை தெரிந்து கொள்ள வேறு வழிகள் கிடையாதென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுள்ள உறுப்பினர்களை வெளிநாட்டவர்கள் என்று வகைப்படுத்த வேண்டுமென இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றது குறித்து பலரும் பல கருத்துக்களை முன் வைத்திருந்தனர். எனினும் அவர் இரட்டை குடியுரிமையற்ற பிரித்தானிய பிரஜை என்பது பலரும் அறியாத விடயம்.
நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுடன் உள்ள உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதனை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை நீதிமன்றம் வெளியிட வேண்டுமென கூறியுள்ளது. எனினும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டால் மாத்திரமே அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க முடியும்.
நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுடன் உள்ளவர்கள் குறித்து மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
20 ஆவது திருத்தச் சட்டம்

நாடாளுமன்றத்தில் உள்ள 21 உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவியேற்றவர்கள்.
இவர்களுள் இரட்டை குடியுரிமையுடன் உள்ளவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் தந்திரமாக சட்டத்தை ஏமாற்றி நாடாளுமன்றத்துக்குள் வந்தவர்கள்.
தற்பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி, இரட்டை குடியுரிமையுள்ள நபர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை வழங்கப்பட மாட்டாது” - என்றார்.