ஏழாண்டு தூக்கத்தின் பின் விழித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி பின்னணி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “மைத்திரியின் அறியாமை, கோட்டாபயவின் தனித்தேவை மற்றும் ரணிலின் அதிகார இருப்புத்தேவை போன்றவற்றால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான உண்மைகள் கண்டறியப்படவில்லை.
தனிப்பட்ட செயலாளர்
பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும் சுரேஷ் சாலேயின் நம்பிக்கையாளராகவும் இருந்த ஆஸாத் மௌலானா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் சனல்-4 இற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களை அளித்துள்ளார்.
அதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

அவை தொடர்பாக அக்கால ஜனாதிபதிகளான கோட்டாபய மற்றும் ரணில் ஆகியோர் அக்கறை காட்டவில்லை.
அவர்கள் தமது அதிகார இருப்பின் மீதுதான் கூடிய கவனம் செலுத்தினர்.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வருகையின் பின்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் விடயத்தில் ஆண்டகை மல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் நம்பிக்கை கொள்ளத்தக்க விதத்தில் விசாரணைகள் சென்றுகொண்டிருக்கின்றன. ஷ
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை
அதிகார இருக்கை
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிப்பதைக் காண முடிகின்றது.
அந்த வகையில் ஆட்சி மாற்றத்தையும் அதிகார இருக்கையையும் பெற்றுக்கொள்வதற்கான தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் அதிகாரப்பசி என்பது எவ்வளவு தூரம் கொடூரமானது என்பதை மக்களால் உணரமுடிகின்றது.
அக்கால சர்வாதிகார முடியாட்சிக் காலத்தில் இந்தியாவில் கௌடில்யரும் இத்தாலியில் மாக்கியவல்லியும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைப்பதற்குமான சதிகள் மற்றும் சூழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகளை மன்னர்களான சந்திரகுப்த மௌரியனுக்கும் மெடிசி மன்னனுக்கும் கூறியிருந்தனர்.
அக்கால முடியாட்சிச் சதிகளை இக்கால குடியாட்சிக் காலத்தில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளார்களா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இனவழிப்பு உண்மைகள்
பௌத்த தர்மத்தை இடையறாது துதிக்கின்றவர்களாக மதிக்கின்றவர்களாக இந்நாட்டின் ஆட்சியாளர்கள் காட்டிக்கொள்கின்றனர்.
அப்படியானவர்கள் அதிகாரத் தேவைக்காக அப்பாவிகளின் உயிர்களோடும் விளையாடுகிறார்கள் என்பது தெரிகிறது.

ஓதுவது தர்மம், செய்வது அதர்மம் என்பதை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் இனவழிப்பு உண்மைகள் உணர்த்துவதாக அமைகின்றன.
குற்றங்களைச் செய்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல், அப்பாவிகளைப் பலிக்கடாக்கள் ஆக்குதல் போன்ற எந்தச் செயலும் பௌத்த தர்மத்தில் இல்லை.
அப்படியானால் இந்நாட்டுத் தலைவர்கள் கூறும் பௌத்த தர்மம் என்பது என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே வாது, சூது, வஞ்சனைகள், பாரபட்சம் இந்நாடு நிமிர உதவாது மற்றும் அதுதான் நாட்டின் நிலைமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |