நெருக்கடிக்குள் இலங்கை - பிரதமர் வெளியிட்ட தகவல்
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு காணப்படும் இடையூறு மற்றும் அதற்காக வரிசையில் காத்திருக்கும் நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் வரிசையில் காத்திருக்கும் செயற்பாட்டை நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மஹிந்த, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய பிரதமர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கத்தினருக்கும் இடையே இன்று (26) அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த, 'இல்லை, நான் பதவி விலக மாட்டேன். பயப்படாதீர்கள்.' எனக் கூறினார்.
