சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சிறிது நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்க்கின்றேன்.
சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
என்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருக்கின்றன, ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன், இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
முதலாம் இணைப்பு
சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கம்மன்பில
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (09) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.
கொள்கலன் விடுவிப்பு விவகாரம்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) அண்மையில் (04.06.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய தயாசிறி ஜயசேகர கடந்த 04 மற்றும் 06ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
