ஆச்சரியத்தில் வெளிநாட்டு தம்பதி: பேருந்து நடத்துனரின் முன்மாதிரியான செயற்பாடு
ஸ்பெயின் தம்பதியொன்று பேருந்தில் விட்டுச் சென்ற சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தை பேருந்தின் நடத்துனர் அவர்களிடமே பத்திரமாக ஒப்படைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நுவரகலையில் இருந்து மஹியங்கனை வரை பயணித்த பேருந்தில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு சுற்றுலா தம்பதி தங்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட் கடிகாரத்தை தவறுதலாக விட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் ஹோட்டலுக்குச் சென்றதும் குடும்ப உறுப்பினர் ஒருவரால் நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட குறித்த கடிகாரம் இல்லாததை உணர்ந்துள்ளனர்.
இலங்கையரின் நேர்மை
பின்னர், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன், அவர்கள் பேருந்து நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் பேருந்து நடத்துனர் ஏற்கனவே கடிகாரத்தைக் கண்டுபிடித்து, அதைப் பாதுகாப்பாக வைக்க தனது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்திருந்தார்.
அதன்படி, இன்று கடிகாரத்தை தேடி வந்த தம்பதியினருக்கு பேருந்து நடத்துனர் அதனை பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நடத்துனர் “இது பணத்தைக் குறித்த விஷயம் அல்ல மனிதநேயம்தான் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்கள் பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்ட வெளிநாட்டு தம்பதியினர், “மிக்க நன்றி. நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இலங்கையில் மிகவும் நல்ல மனிதர்கள்” என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், இலங்கையரின் நேர்மை, மனிதநேயம் மற்றும் நம்பிக்கைக்குரிய பண்புகளை உலகிற்கு காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
