தையிட்டி போராட்டத்தில் வலுத்த மனித உரிமை மீறல்கள்...
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது காவல்துறை பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தமை அடிப்படை மனித உரிமைகள் மீறல்களை தாம் செய்யாமல் நீதிமன்ற கட்டளைகள் மூலம் நிறைவேற்றும் உத்தி என சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
நேற்று திங்கட்கிழமை மல்லாக நீதிமன்றத்தில் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை, கோவை (106) மற்றும் (81) ன் கீழ் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவர் தனது சமர்ப்பணத்தில்,
முதலாவது காணி விடுவிப்பு
“2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சார்பாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் அப்போதைய யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தனது கட்டளையில் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என உத்தரவிட்டார்.
அதேபோல் மேலும் பல நீதிமன்றங்கள் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற தீர்ப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆர்ப்பாட்டங்கள் கலவரமாகும் போது காவல்துறை கட்டளை சட்டம் பிரிவு( 54) கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இருக்கும் நிலையில் தையிட்டி விவகாரத்தில் பொது தொல்லை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் என்ன என மன்றில் கேள்வி எழுப்பினார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிவிலியன் ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட ஒழுங்கைப் பேனுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி கையேட்டில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை சமரசத்தில் முடிவுறுத்த வேண்டும் என்ற எடுகோலிலே பார்க்க வேண்டும்.
தையிட்டி விகாரை
ஆர்ப்பாட்டங்களில் கலவரங்கள் ஏற்படும் என காவல்துறையினர் கருதினால் காவல்துறையினரே அதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களால் இதுவரை கலவரங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பொதுத் தல்லை சட்ட ஏற்பாடுகளில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தனது சமர்ப்பணத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினரால் பொறப்பட்ட நீதிமன்றக் கட்டளை 14 நாட்களை கடந்த நிலையில் வலுவிழந்த கட்டளையை சட்டத்தின்பால் நீடிக்க முடியாது.
தையிட்டி போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினரால் பெறப்பட்ட கட்டளை பிரதிவாதிகளை அழைக்காமல் ஒரு தரப்பு சார்பான கட்டளை என்பதால் பிரிவு 106 (4) இன் கீழ் கட்டளையை நீக்க முடியும்.
மேலும் வழக்காளிகளாக நீதிமன்றத்தில் தோன்றியவர்கள் மீது இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் தாக்கல் செய்ததன் மூலம் பிணை வழங்கும்போது பிணையாளிகளை தேடுவதற்கான அசொளகரியங்களை ஏற்படுத்துவதுடன் போராட்ட ஓர்மத்தை குறைப்பதற்கான காவல்துறையினரின் உத்தியே” என மன்றில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அதேபோல் சட்டத்தரணிகள் எம். ஏ சுமந்திரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரம் தமது சமர்ப்பணங்களை மன்றில் முன் வைத்தனர்.
அனைவரது சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று எதிர்வரும் மாசி மாதம் 26 ஆம் திகதி கட்டளை வழங்குவதாகவும் எதிராளி அனைவரையும் சொந்த பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |