எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்ட ஈடு வழங்க தாய் நிறுவனம் ஒப்புதல்
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கான நட்ட ஈடாக 285 மில்லியன் ரூபாவை வழங்க குறித்த கப்பலின் தாய் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக மேலும் 16 மில்லியன் ரூபாவை வழங்க குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த ஜுலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு
இந்த நிலையில் , கப்பலின் தாய் நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெறும் தொகையை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாய் நிறுவனமும் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதே சமயம் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.